×

தாய் செல்வியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு மாணவி மதி வழக்கில் ஆசிரியர்கள் பெயர் நீக்கம் 21ம் தேதி ஆட்சேபனையை தெரிவிக்கலாம்

விழுப்புரம், ஜூன் 13: மாணவி மதி மரண வழக்கில் ஆசிரியர்கள் பெயர் நீக்கம் குறித்து வரும் 21ம் தேதி ஆட்சேபனையிருந்தால் தெரிவிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் மதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மரண வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு பிறகு 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த இவ்வழக்கை தற்கொலைக்கு காரணமாக இருத்தல்(சட்டப்பிரிவு 305) மற்றும் இளஞ்சிறார் நீதி குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்(75), காப்பகங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம்(சட்டப்பிரிவுகள் 5, 6) ஆகிய பிரிவுகளில் மாற்றம் செய்திருந்தனர். மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைகளான கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரின் பெயர்களையும் இவ்வழக்கில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கம் செய்துள்ளனர்.

இதையடுத்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மாணவியின் தாய் செல்விக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. அதில், இவ்வழக்கில் இருந்து கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதால் இதில் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் குற்றப்பத்திரிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் ஆட்சேபனை தெரிவிக்கமுடியாது என்றும், அதன் நகலையும், மேலும் சில ஆவணங்களையும் வழங்கிடுமாறு கடந்த 5ம் தேதி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவைஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை நகல் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க ஒப்புதல் தெரிவித்து நேற்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி நேற்று வழக்குவிசாரணைக்கு வந்தபோது குற்றப்பத்திரிக்கை நகல் உள்ளிட்ட ஆவணங்களை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாய் செல்வியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஆட்சேபனையிருந்தால் வரும் 21ம் தேதி தெரிவிக்கலாம் என்று கூறி அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post தாய் செல்வியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு மாணவி மதி வழக்கில் ஆசிரியர்கள் பெயர் நீக்கம் 21ம் தேதி ஆட்சேபனையை தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Madi ,Viluppuram ,Madhi ,
× RELATED மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...